Saturday, May 11, 2013

நம்பிக்கை


காரிருள் யாமத்தில் தனிமையின் தணலுக்குள்

ஓரிதழ் உதிர்த்தாள் பெண் – யாரிவள்

விண்கொண்ட கலைவடிவோ பூவோ எனவியக்க

கண்வீசி செய்தாள் சதி!

 

முழுமதி முகங்கண்டு இரவினை வீண்செய்து

கழுவிலே வாடியதென் நெஞ்சம் – புழுதி

போகாத சாலையென ஆனதடி சிந்தை

நோகாத உன்சிரிப்பு கண்டு!

 

விழியின் கணையோடு மனம்கொள் வாளொன்று

பழியாக தாக்கியதை எண்ணி – குழியில்

வீழ்கின்ற வெள்ளமென பாய்கின்ற ஆசைகளும்

பாழ்பட்டு போனதடி நேற்று!

 

மனக்கதவை தட்டுதற்கு மல்லிகை நீவரவில்லை

எனக்கதனால் உயிரில்லை என்றேன் – தினமுன்

முகம்பார்க்கும் வரம்கிட்டின் மகிழ்வேன், சொர்க்க

அகம்பார்த்த ஆத்திகனாய் நான்!

 

வளையோசை ஒலிக்கின்ற கனவுகளை நானினிமேல்

களையவே முடியாத நிலைவருமோ – விளையாடும்

மான்கூட்டம் மீதினிலே புலிபாய்ந்த நிலைபோலே

நான்கொண்ட உயிர்கொள்ளும் அச்சம்!

 

மூண்டெழும் காமத்தை முன்னின்று தடுத்தங்கு

மீண்டெழும் அலையாக ஆனேன் – தீண்டாமல்

நீசெல்ல, துடிக்கின்ற சின்னமனம் நிகராகும்

தீசெல்ல வழியாகும் தளிர்!

 

ஓவியமே உயிர்த்தாற்போல் ஏந்திழைநீ தவழ்ந்திங்கு

காவியமே நடத்துகிறாய் கண்ணில் – பூவிரியும்

ஓசையினை கேட்பதற்கு இயலுமோ பெண்ணழகே

ஆசயினை அடக்கியதென் உயிர்!

 

குழலவிழ்த்து நகைபுரிந்து ஆறா என்மனத்

தழலவித்து கனியீவாள் காணீர் – பிழறாது

பத்தியம் நீக்கிப்பின் நீங்கா நிலைகொண்டு

சத்தியமாய் சொல்வாள் கவி!


 

No comments:

Post a Comment