Wednesday, May 15, 2013

வண்ணத்துப்பூச்சி!


 

 
வண்ணச் சிறகடித்து வண்ணத்து பூச்சியொன்று

  வட்டமிட்டு வட்டமிட்டு வளையவரப் பார்த்தவுடன்

எண்ணச் சிறகொடிந்து; எந்தன் நிலைமறந்து

  எகிறித் தாவியதை என்னிடத்தேக் கொண்டுவந்தேன்!

 

புள்ளிக் கோலமெல்லாம் பூஞ்சிறகு ஓரத்திலே

  பூப்பூவாய் தூவிவைத்து பூமியிலே விதைத்தவன்யார்?

பள்ளிச் சோலையில்தன் பட்டுமலர் சிறகடித்து

  பறந்துவரும் ஜீவனிடம் பக்குவமாய் கேட்கின்றேன்!

Saturday, May 11, 2013

நம்பிக்கை


காரிருள் யாமத்தில் தனிமையின் தணலுக்குள்

ஓரிதழ் உதிர்த்தாள் பெண் – யாரிவள்

விண்கொண்ட கலைவடிவோ பூவோ எனவியக்க

கண்வீசி செய்தாள் சதி!

 

முழுமதி முகங்கண்டு இரவினை வீண்செய்து

கழுவிலே வாடியதென் நெஞ்சம் – புழுதி

போகாத சாலையென ஆனதடி சிந்தை

நோகாத உன்சிரிப்பு கண்டு!

 

விழியின் கணையோடு மனம்கொள் வாளொன்று

பழியாக தாக்கியதை எண்ணி – குழியில்

வீழ்கின்ற வெள்ளமென பாய்கின்ற ஆசைகளும்

பாழ்பட்டு போனதடி நேற்று!

 

மனக்கதவை தட்டுதற்கு மல்லிகை நீவரவில்லை

எனக்கதனால் உயிரில்லை என்றேன் – தினமுன்

முகம்பார்க்கும் வரம்கிட்டின் மகிழ்வேன், சொர்க்க

அகம்பார்த்த ஆத்திகனாய் நான்!

 

வளையோசை ஒலிக்கின்ற கனவுகளை நானினிமேல்

களையவே முடியாத நிலைவருமோ – விளையாடும்

மான்கூட்டம் மீதினிலே புலிபாய்ந்த நிலைபோலே

நான்கொண்ட உயிர்கொள்ளும் அச்சம்!

 

மூண்டெழும் காமத்தை முன்னின்று தடுத்தங்கு

மீண்டெழும் அலையாக ஆனேன் – தீண்டாமல்

நீசெல்ல, துடிக்கின்ற சின்னமனம் நிகராகும்

தீசெல்ல வழியாகும் தளிர்!

 

ஓவியமே உயிர்த்தாற்போல் ஏந்திழைநீ தவழ்ந்திங்கு

காவியமே நடத்துகிறாய் கண்ணில் – பூவிரியும்

ஓசையினை கேட்பதற்கு இயலுமோ பெண்ணழகே

ஆசயினை அடக்கியதென் உயிர்!

 

குழலவிழ்த்து நகைபுரிந்து ஆறா என்மனத்

தழலவித்து கனியீவாள் காணீர் – பிழறாது

பத்தியம் நீக்கிப்பின் நீங்கா நிலைகொண்டு

சத்தியமாய் சொல்வாள் கவி!