Wednesday, February 3, 2010

உன்னை நனைத்த நிலவு

விரல் கோர்த்தபடி
வீதியுலா சென்றதில்லை

மடி கிடத்தி
மனம் விட்டு பேசியதில்லை

உருண்டை பிடித்து
உணவு ஊட்டிவிட்டதில்லை

கண்ணீர் தருணங்களில்
கட்டி அணைத்து ஆறுதல் சொன்னதில்லை

தோள் சாய்ந்தபடி
தூர பயணம் செய்ததில்லை

உனதுள்ளம் எனக்காவென
உறுதியாக தெரியவுமில்லை

எனினும் இந்த இரவில்
எங்கேயோ உன்னையும் நனைக்கிறது
என்பதாலேயே
நின்று ரசிக்கிறேன் - இந்த
நிலவை!

No comments:

Post a Comment