Sunday, January 3, 2010

உயிர்த்திருத்தலின் வலி

நினைவுகள் பகிர்ந்து கொண்டேன் - சில
நிஜங்களை உணர்ந்து கொண்டேன்!
பனைமரம் போலே வளர்ந்தும் - நான்
பக்குவம் இல்லை கண்டேன்!

விழிகளில் கண்ணீர் துளிகள் - பெரும்
விரைவிலே வழிய நின்றேன்!
மொழிகளில் சொல்லா துயரம் - என்
மோனத்தில் உரைத்து நின்றேன்!

போனவை போன பின்பும் - நான்
போக்கற்று போய்விட வில்லை!
ஆனது ஆனது என்று - என்னை
ஆறுதல் செய்திட வில்லை!

இன்பமும் துன்பமும் வாழ்வில் - என்றும்
இருபக்கம் என்றே சொல்லி
துன்பத்தை ஏற்று கொள்ளும் - பெரும்
துயரத்தை பழகி கொண்டேன்!

துன்பமும் துன்பமே அல்ல - ஒரு
துப்பின்றி தோற்ற முயற்சி!
வன்மமும் கோபமும் இன்றி - நல்
வாழ்வுக்கு ஆன பயிற்சி!

என்பதை கண்டு கொண்டும் - நான்
இழந்ததை எண்ணி நொந்தேன்!
என்பதால் என்ன செய்தேன் - நான்
இன்னமும் உயிர்த்து நின்றேன்.

No comments:

Post a Comment