Sunday, February 28, 2010

நசிந்த நம்பிக்கைகள்!

வாழ்வை ரசித்தது ஒரு காலம்
வசந்தம் தேடியது ஒரு காலம்
தாழ்வை நோக்கிய என் வாழ்வு
தளர்ந்து போனது சில காலம்

"ஞாலம் துலக்க போகின்றேன்
ஞானம் தேடி போகின்றேன்
காலம் முழுதும் வாழும்
கவிதை தேடி போகின்றேன்" (என)

புலம்பி திரிந்தது ஒரு காலம்
புகழ்ச்சி ருசித்தது ஒரு காலம்
கலகம் தெளிந்தது ஒரு காலம்
கனவுகள் கலைந்தது ஒரு காலம்

காதல் ரசித்தது ஒரு காலம்
காற்றை ரசித்தது ஒரு காலம்
சாதல் கூட ரசிக்க தக்கது
சரியாய் கண்டது இக்காலம்

அமுதினும் இனிது உலகறிவேன்
அதைத்தான் நானும் வெறுக்கின்றேன்
சமுத்திரம் மோதும் கரையோரம்
சவமாய் ஒதுங்க துடிக்கின்றேன்!

Thursday, February 18, 2010

எப்போது தெளிவேன்?

மழைக்காக காத்திருக்கையில்
ஒரு வழியாக
திரண்டது மேகம்!

என்னை நோக்கி சிந்திய ஆறுதல் துளிகள்
என்னை அடையும் முன்பே ஆவியாகின!

எப்போது உணர்வேன்
நான் பாலை என?
என் வெப்பமே என் எதிரி என?

Wednesday, February 3, 2010

உன்னை நனைத்த நிலவு

விரல் கோர்த்தபடி
வீதியுலா சென்றதில்லை

மடி கிடத்தி
மனம் விட்டு பேசியதில்லை

உருண்டை பிடித்து
உணவு ஊட்டிவிட்டதில்லை

கண்ணீர் தருணங்களில்
கட்டி அணைத்து ஆறுதல் சொன்னதில்லை

தோள் சாய்ந்தபடி
தூர பயணம் செய்ததில்லை

உனதுள்ளம் எனக்காவென
உறுதியாக தெரியவுமில்லை

எனினும் இந்த இரவில்
எங்கேயோ உன்னையும் நனைக்கிறது
என்பதாலேயே
நின்று ரசிக்கிறேன் - இந்த
நிலவை!

இன்னொரு சந்திப்பு

நன்றாடிய வீதிகள்..
நின்றோடிய நாட்கள்..
கொண்டாடிய தினங்கள்..
சென்றோடிய கணங்கள்..

எல்லாம் பேசி தீர்த்த பின்

இறக்கி வைக்கப்பட்டதொரு
இனிய முத்தம்

தொடங்கி வைக்கப்பட்டதொரு
தொன்மை யுத்தம்

******

உன் ஸ்பரிசம் உன் இளமை சொன்னது
உன் வயது உன் முதுமை சொன்னது

இன்னொன்றுக்காக
இமை மூடி
நின்றபோது

உனக்கான மலர்ப்பாதை உன்னையும்
எனக்கான சவக்குழி என்னையும்
விடாமல்
விளித்துக்கொண்டிருன்தது
வினையாலணையும் கருவியால்

*****

விடை பெற்றோம் மீண்டும்
இன்னொரு பிரிவு!

Sunday, January 17, 2010

இணையாத இதையங்கள்

அடுத்த
அறையில்
அயர்ந்து உறங்குகிறது - என்
அரைக்கால் நூற்றாண்டு காதல்!

இதையத்தில்
இமையத்தை ஏற்றி வைத்து
இந்த அறையில்
இமை மூடாதிருக்கிறேன்
இந்த
இரவில்!

இருவர்க்கும்
இடையேயான
இடைவெளியாய்
இருந்துகொண்டிருப்பது - வெறும்
சுவர் மட்டுமே தானா??

இணையாத
இதையங்கள் கொண்ட உடல்கள்
இணைவதேயில்லை ஒருபோதும்!

Thursday, January 7, 2010

பேராசை

உள்ளம் உடைந்து போகும்போதெல்லாம்
உனது சில வார்த்தைகளில்
உண்டாகும் ஆறுதல்...

விழிகளில் வழியும் முன் - உன்
விரல்சுண்டி மரிக்கும் கண்ணீர்...

ஒவ்வொரு விடியலிலும்
ஓரளவேனும் அமைதி...

இதையத்திலேப்போதும்
இருக்கை இட்ட நீ..

துக்கம் தகர்க்கும் பொழுதுகளில் - உன்
துளிர்மடி கிட்டும் சாந்தி..

நட்ட்று வீழும் வேளை - கொஞ்சம் உன்
நம்பிக்கை வார்த்தைகள்..

இவை மட்டுமே எனக்கு
நிரந்தரமாகிவிடக்கூடாதா??

******  *********  **********  **********

எழுதப்பட்ட நாள்: 17-09-2000

கண்ணீர் தருணங்கள்

விழித்து பார்க்கும்
விடியல் ஒவ்வொன்றிலும் - நான்
விசாரிக்கப்படாமல் போகையிலும்..

இரவை கடத்த
இயலாத - என்
இற்றுவிட்ட  
இதையம்
இறந்துவிடுமோ - என
இமைகள் துடிக்கையிலும்..

கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!

****

என்
பாச வேர்கள்
பட்டுபோகையிலும்
சுவாச மண்டலம்
சுட்டு போதையிலும்

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****

தாங்க முடியாத தோல்விகளை - நான்
சந்திக்க நேர்கையிலும்
தூங்க முடியாத இரவுகளில் - நான்
சிந்திக்க முயலுகையிலும்

நான் நிராகரிக்கப்படும்
எல்லா நிமிடங்களிலும்
நான் சந்தேகிக்கப்படும்
எல்லா வினாடிகளிலும்

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****

என்
வாழ்வின் முன்னுரையை
வாசிக்க நேர்கையிலும்
என்
தாழ்வின் காரணீயர்களை
தரிசிக்க நேர்கையிலும்..

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****
எனினும்..
இன்று சிந்தப்பட்ட கண்ணீரின்
அடர்த்தியும் கனமும்
அதிகரித்திருப்பதற்கு
அடியேன் மட்டுமே காரணமல்ல!

**********   **********   **********
எழுதப்பட்ட நாள்: 06.12.1999
எழுதப்பட்ட இடம்: கோவை